திருக்குறள் - 804     அதிகாரம்: 
| Adhikaram: pazhaimai

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

குறள் 804 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vizhaidhakaiyaan vaendi iruppar kezhudhakaiyaar" Thirukkural 804 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார். இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார். (ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின் அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நட்டார் கெழுதகையால் கேளாது செயின்-பழைமையான நண்பர் தம்மைக் கேட்டுச் செய்ய வேண்டிய ஒரு வினையைத் தம் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டியிருப்பர் - அறிவுடையார் அதன் விரும்பப்படுந் தன்மை பற்றி அவரைத் தமக்கு வேண்டியவராகக் கொள்வார். தம் ஏவலாற் செய்யப்படுவதான ஒரு கருமத்தைத் தம் ஏவலின்றியே செவ்வையாய்ச் செய்து முடித்தாராயின், செய்தவரை "ஏவா மக்கள் மூவா மருந்து" என்று அறிவுடையார் பாராட்டுவதல்லது வேறுவகையாகக் கருதி வெறுக்கார் என்பதாம். செய்தற்குரிய செயப்படு பொருளும் வேண்டியிருத்தற்குரிய வினை முதலும் வருவிக்கப்பட்டன.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நன்மதிப்புடன் நட்பு கொண்டு இருப்பவர் உரிமையால் தன்னை கேளாமல் வேண்டியதை செய்தாலும் பழைமை பாராட்டுவார்.

Thirukkural in English - English Couplet:


When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.

ThiruKural Transliteration:


vizhaidhakaiyaan vaeNdi iruppar kezhudhakaiyaaR
kaeLaadhu nattaar seyin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore