திருக்குறள் - 1140     அதிகாரம்: 

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

குறள் 1140 - திருவள்ளுவர் - ThiruValluvar

"yaamkannin kaana nakupa arivillaar" Thirukkural 1140 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறிவிலார் நகாநின்றார். அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறாமையான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர் அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான். ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(செவிலிக் கறத்தொடு நின்றுவைத்து , யான் அறத்தொடு நிற்குமாறு எங்ஙனமென்று நகையாடிய தோழியொடு புலந்து , தலைமகள் சொல்லியது . ) அறிவு இல்லார் - அறிவிலாதார் ; யாம்பட்ட தாம் படா ஆறு - யாம் பட்ட நோய்களைத் தாம்பட்டு அறியாமையால் ; யாம் கண்ணின் காண நகுப - யாம் காதாற் கேட்குமாறு மட்டுமன்றிக் கண்ணாலுங் காணுமாறு எம்மை நகையாடுவர். தோழி அறத்தொடு நின்றமையை அறியாது புலக்கின்றாளா தலின் , அவளை அயலாளாக்கிக் கூறினாள் . ' கண்ணிற்காண ' என்றது முன் கண்டறியாமை யுணர்த்தி நின்றது . இது சேட்படுத்தி நகையாடிய தோழிக்குத் தலைமகன் கூறியதாகவுங் கொள்வர். தலைமகன் கூற்று முன்னரே ஏழாங் குறளொடு முடிந்துவிட்டமை யாலும், தோழியின் துணையை இன்றியமையாததாகக் கொண்ட தலைமகன் அவளை அறிவில்லாளென்று பழித்தல் இயல்பன்மையானும், அது பொருந்தாதென்க.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நாம் கண்ணில் பார்க்கும் படியே நகைப்பர் அறிவல்லாதவர் நாம் பட்டதை அவர்கள் படாதபடி மாற்று வழியில் நடப்பதால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.

Thirukkural in English - English Couplet:


Before my eyes the foolish make a mock of me,
Because they ne'er endured the pangs I now must drie.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

ThiruKural Transliteration:


yaamkaNNin kaaNa nakupa aRivillaar
yaampatta thaampadaa aaRu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore