திருக்குறள் - 918     அதிகாரம்: 
| Adhikaram: varaivinmakalir

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

குறள் 918 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aayum arivinar allaarkku anangenpa" Thirukkural 918 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிரது முயக்கத்தை. இஃது இவரை அறிவில்லாதவர் சேர்வரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மாய மகளிர் முயக்கு - உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர். (அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள்.தாக்கு -தீண்டல். இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மாய மகளிர் முயக்கு-அழகு , ஒப்பனை, நளினம், தளுக்கு, ஆடல், பாடல் முதலியவற்றால் ஆடவரை, சிறப்பாக இளைஞரை மயக்கி வஞ்சிக்கும் விலை மகளிரின் தழுவலை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப- அவ்வஞ்சனையை ஆராய்ந்தறியும் அறிவில்லார்க்குக் காமினிப் பேய் தாக்கு என்பர் அறிஞர். அணங்கென்றது அணங்குதாக்கை.அணங்கு காமவழியால் ஆடவர் உயிரைக் கவரும் அழகிய பெண்பேய். தாக்குத் தழுவல்.முன் இன்பஞ் செய்வதுபோல் தோன்றிப் பின் வறுமையாலும் நோயாலும் வாழ்நாளைக் குறுக்கும் விலைமகளிர் முயக்கத்திற்கு ,முன் இன்பமாகத் தோன்றிப் பின் உயிர் கவரும் காமினிப் பேயின் தழுவலை உவமங் கூறினார்.அணங்குதல் வருந்துதல் அணங்கும் பெண்பேயை அணங்கென்றது முதனிலைத் தொழிலாகு பெயர்.'அணங்கு' இங்கு அணங்குதாக்கைக் குறித்தலால் ஆகுபொருளி.'அணங்கென்ப' என்பது அணங்குதாக்குப் போல்வதென்பார் என்றே பொருள்படுதலால், உவமையாவதன்றி உருவகமாகாது.இதை "மாத ரடிக்கு நெருஞ்சிப் பழம்" என்பதுபோற் கொள்க.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வஞ்சக எண்ணங்கொண்ட பொதுமகள் ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்று கூறுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சீர்தூக்கி ஆராயும் அறிவற்றவர்களே தெய்வீகம் என்பார்கள் போலியான மகளிரின் உடல்உறவை.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, ‘அணங்குத் தாக்கு’ என்று சொல்வார்கள்.

Thirukkural in English - English Couplet:


As demoness who lures to ruin woman's treacherous love
To men devoid of wisdom's searching power will prove.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female.

ThiruKural Transliteration:


aayum aRivinar allaarkku aNangenpa
maaya makaLir muyakku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore