திருக்குறள் - 121     அதிகாரம்: 
| Adhikaram: atakkamutaimai

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

குறள் 121 - திருவள்ளுவர் - ThiruValluvar

"adakkam amararul uykkum adangaamai" Thirukkural 121 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம்போல் தம் குற்றமும் காணும்(குறள்.190) நடுவுநிலைமை உடையார்க்கு ஆகலின், இது நடுவு நிலைமையின்பின் வைக்கப்பட்டது.) அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அடக்கம் அமரருள் உய்க்கும் - அடக்கமாகிய நன்று ஒருவனைத் தேவருலகத்திற் கொண்டுபோய்ச் சேர்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய தீது ஒருவனைத் தங்குதற்கரிய இருளுலகத்திற்குச் செலுத்திவிடும். இருள் என்றது இருளுலகத்தை. இருளுலகமாவது நரகம். : "இருளுலகஞ் சேராதவாறு" என்று நல்லாதனார் ( திரிகடுகம் , 90) கூறுதல் காண்க. பண்டைக் காலத்தில் இருட்டறையுள் அடைப்பதும் ஒருவகைத் தண்டனையாயிருந்தமையின், நரகம் இருளுலகம் எனப்பட்டது. ஆர் இருள் என்பது திணிந்த இருள் என்றுமாம். விடு என்பது விரைவும் நிறைவும் உணர்த்தும் துணை வினைச்சொல்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அடக்கமாகிய அறம் ஒருவனை அமரர்கள் உலகில் கொண்டு செலுத்தும். அடக்கமில்லாத தீய குணம் பொறுத்தற்கரிய (இருண்ட) துன்ப உலகில் செலுத்தும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பணிவு தெயவீகமானவர்களுடன் சேர்க்கும் பணிவற்ற தன்மை மீளமுடியாத இருட்டில் சேர்த்து விடும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்.

Thirukkural in English - English Couplet:


Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

ThiruKural Transliteration:


adakkam amararuL uykkum adangaamai
aariruL uyththu vidum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore