திருக்குறள் - 78     அதிகாரம்: 
| Adhikaram: anputaimai

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

குறள் 78 - திருவள்ளுவர் - ThiruValluvar

"anbakath thillaa uyirvaazhkkai vanpaarkan" Thirukkural 78 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அகத்து அன்பு இல்லா உயிர்வாழ்க்கை - உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்; வன்பாற்கண்வற்றல் மரம் தளிர்த்த அற்று-பாலை நிலத்தின் கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும். நடவாத தென்பதாம். ' வற்றல் ' தொழிலாகு பெயர். ' வற்றன் மரம்' இருபெயரொட்டு அன்னது - அற்று. அன்பில்லா மக்களை உயிர் என்றது இழிவுக் குறிப்பு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தில் அன்பில்லாதவரது உயிர்வாழ்க்கை வலிய பாலை நிலத்தில் பட்டுப்போன மரமானது தளிர்த்தது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அகத்தில் அன்பில்லா உயிர் வாழ்க்கை கடினமான பாறையில் வெப்பத்தில் மரம் துளிர்வதை போன்றது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம்.

Thirukkural in English - English Couplet:


The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert,

ThiruKural Transliteration:


anbakath thillaa uyirvaazhkkai vanpaaRkaN
vatral marandhaLirth thatru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore