திருக்குறள் - 888     அதிகாரம்: 
| Adhikaram: utpakai

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

குறள் 888 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aramporudha ponpoalath thaeyum uramporudhu" Thirukkural 888 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உட்பகையானது உற்ற குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன்னைப் போல, அதனால் பொரப்படவே வலி தேயும். இஃது உட்பகை அழகு செய்வது போலப் பலத்தைக் கெடுக்குமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உட்பகை உற்ற குடி - முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி, அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும். ('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உட்பகை யுற்ற குடி- உட்பகை யுண்டான குடி; அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தால் அராவப்பட்ட இரும்பு போல உட்பகையால் அராவப்பட்டு வலிமை குன்றும். பொருது என்னும் வினையெச்சம் தேயும் என்னும் வினைமுற்றுக் கொண்டு முடிந்தது.உட்பகை பொருதுதேயும் என்பது புலியடித்துச் செத்தான் என்பது போன்ற வழக்கு,குடி யுரந்தேயும் என்பதில் சினைவினை முதல் வினையாக நின்றது.இவ்விரு குறளாலும் ஒரு குடும்பம் அல்லது உறவுத்தொகுதி உட்பகையாற் கெடுவது கூறப்பட்டது.' பொன் ' இங்கு இனம்பற்றி இரும்பைக் குறித்தது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அரத்தால் தேய்க்க எதிர்க இயலாது தேயும் தங்கம் போல் உட்பகையின் வலிமையால் குடும்ப உறவும் தேயும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்.

Thirukkural in English - English Couplet:


As gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.

ThiruKural Transliteration:


aramporudha ponpoalath thaeyum uramporudhu
utpakai utra kuti.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore