திருக்குறள் - 243     அதிகாரம்: 
| Adhikaram: arulutaimai

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

குறள் 243 - திருவள்ளுவர் - ThiruValluvar

"arulsaerndha nenjinaark killai irulsaerndha" Thirukkural 243 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. ('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் திணிந்த துன்பவுலகமாகிய நரகத்துட் புகுதல்; அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் நிறைந்த நெஞ்சையுடைய துறவியருக் கில்லை. தீயுழியும் அளறும் போல இருளுலகமும் நரக வகையாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இருள் நிறைந்த துன்ப உலகத்தில் சென்று புகுதல் என்பது அருள் நிறைந்த நெஞ்சினையுடையவர்களுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் அடைந்த மனம் படைத்தவருக்கு இல்லை இருளோடு இருக்கும் துன்பமான உலகத்தில் புகுவது.

Thirukkural in English - English Couplet:


They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.

ThirukKural English Meaning - Couplet -Translation:


They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness.

ThiruKural Transliteration:


aruLsaerndha nenjinaark killai iruLsaerndha
innaa ulakam pukal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore