திருக்குறள் - 1117     அதிகாரம்: 

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

குறள் 1117 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aruvaai niraindha avirmadhikkup poala" Thirukkural 1117 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அறுவாய் நிறைத்த அவிர்மதிக்குப் போல - முன் குறைந்தவிடம் நிரம்பிய விளங்கும் மதியத்திற்குப்போல ; மாதர் முகத்து மறு உண்டோ - இப்பெண்ணின் முகத்தில் ஏதேனுங்களங்க முண்டோ ? இல்லையே ! அங்ஙனமிருந்தும் அவ்விண்மீன்கள் வேறுபாடறியாது கலங்கித் திரிவானேன் ? அறுவாய் கரும்பக்கம் , மதியம் முழுநிலா , தேய்தலும் வளர்தலுந் தோன்ற ' அறுவாய் நிறைந்த ' என்றான் . தேய்வுவளர்ச்சிகளும் மறுவுடைமையும் வேறுபாடறிவிக்கவும் , அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட, இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


குறைந்து நிறையும் நிலையற்ற நிலாவினைப் போல் மாறுபாடு உண்டோ மங்கை முகத்திற்கு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளது போல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ?

Thirukkural in English - English Couplet:


In moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Could there be spots in the face of this maid like those in the bright full moon ?.

ThiruKural Transliteration:


aRuvaai niRaindha avirmadhikkup poala
maRuvuNdoa maadhar mukaththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore