திருக்குறள் - 846     அதிகாரம்: 
| Adhikaram: pullarivaanmai

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

குறள் 846 - திருவள்ளுவர் - ThiruValluvar

"atram maraiththaloa pullarivu thamvayin" Thirukkural 846 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம்பாலுள்ள குற்றத்தைப் பிறரறியாமல் தாம் மறையாத காலத்துப் பிறர் காணாமல் மறைக்க வேண்டும் உறுப்பை ஆடையால் மறைத்தலும் புல்லறிவு. எனவே, அதுவும் மறையானாயின் குற்றம் நாடுவாரில்லை யென்றவாறாயிற்று. இது குற்றமறையாமை புல்லறிவென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம் வயின் குற்றம் மறையாவழி - புல்லறிவாளர் தம்கண் நிகழும் குற்றங்களை அறிந்து கடியாராயின்; அற்றம் மறைத்தலோ புல்லறிவு - ஆடையால் அற்றம் மறைத்தாராகக் கருதுதலும் புல்லறிவாம். (குற்றம் மறைத்தலாவது, அவற்றை இலவாக்குதல். மறைக்கப்படுவன பலவற்றுள்ளும் உயர்ந்தவற்றை எல்லாம் மறையாது தாழ்ந்த தொன்றனையே மறைத்து, அவ்வளவால் தம்மையும் உலக ஒழுக்கினராக மதித்தலும் புல்லறிவென்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் தம்மை வியத்தற்குற்றம் கூறப்பட்டது.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தம் வயின் குற்றம் மறையாவழி- புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து; அற்றம் மறைத்தலோ புல் அறிவு- தம் மரும வுறுப்புக்களை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்ளுதல் சிற்றறிவாம். 'அற்றம்' ஆடையற்ற நிலை . மறைத்தல் இரண்டனுள் முன்னது கண்ணிற்குத் தோன்றாதவாறு செய்தல்; பின்னது இல்லாதவாறு செய்தல் . அற்றம் மறைத்தலினும் குற்றம் மறைத்தலே உயர்திணை மாந்தனுக்கு இன்றியமையாத தென்பது கருத்து. ஓகாரம் பிரிநலை.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அழிவை மறைப்பதே அற்பத்தனம், தனது குற்றம் மறையாமல் இருப்பதற்கும் இதுவே வழி.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.

Thirukkural in English - English Couplet:


Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).

ThiruKural Transliteration:


atram maRaiththaloa pullaRivu thamvayin
kutram maRaiyaa vazhi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore