திருக்குறள் - 259     அதிகாரம்: 
| Adhikaram: pulaanmaruththal

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

குறள் 259 - திருவள்ளுவர் - ThiruValluvar

"avisorinh thaayiram vaettalin ondran" Thirukkural 259 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய வுணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி உடம்பைத் தின்னாமை நன்றாம். ஆரிய வேள்விகள் கொலை வேள்விகளாதலானும், ஆயிரம் வேள்விப் பயனினும் ஓருயிரியைக் கொல்லாமையின் பயன் பெரிதென்றமையானும், அவை விலக்கப்பட்டனவாம். பாட வேறுபாடு: அவிசொரிந் தாயிரம் வேட்டலன் றொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. இப்பாடம், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலன்று ; ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமையே நன்று என்று பொருள் தருதல் காண்க. இதில் ஏகாரம் தொக்கது

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நெய் முதலியவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒரு விலங்கின் உயிரினைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நல்லதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெய் உற்றி ஆயிரம் வேள்வி செய்வதிலும் ஒன்றின் உயிரை அழித்து உண்ணாமை நல்லது.

Thirukkural in English - English Couplet:


Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.

ThiruKural Transliteration:


avisorinh thaayiram vaettalin ondran
uyirsekuth thuNNaamai nandru

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore