திருக்குறள் - 205     அதிகாரம்: 
| Adhikaram: theevinaiyachcham

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

குறள் 205 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ilan endru theeyavai seyyarka seyyin" Thirukkural 205 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இலன் என்று தீயவை செய்யற்க-எவனேனும் யான் பொருளில்லாதவன் என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் மீண்டும் வறியனாவான். தீவினையான் வந்த பொருளை விரைந்து இழந்து விடுவானாதலின் மீண்டும் வறியனாவான் என்றார். 'இலன்' இரண்டுள், முன்னது தன்மை யொருமைக் குறிப்பு வினைமுற்று; பின்னது படர்க்கையாண்பாற் குறிப்புவினையாலணையும் பெயர். 'மற்று' அசைநிலை. உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நான் வறியவன் என்று நினைத்து அதனைப் போக்க ஒருவன் தீய செயல்களைச் செய்யா திருப்பானாக; அப்படிச் செய்வானானால், மீண்டும் வறியவனாவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லை என்று கெடுதலை செய்யவேண்டாம், செய்தால் இல்லாமல் போகும் மற்றவைகளும் வேறுபட்டு.

Thirukkural in English - English Couplet:


Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.

ThiruKural Transliteration:


ilan-endru theeyavai seyyaRka seyyin
ilanaakum matrum peyarththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore