திருக்குறள் - 1042     அதிகாரம்: 
| Adhikaram: nalkuravu

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

குறள் 1042 - திருவள்ளுவர் - ThiruValluvar

"inmai enavoru paavi marumaiyum" Thirukkural 1042 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். ('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இன்மை என வரு பாவி- வறுமையென்று சொல்லப்படுவ தொரு கொடியான்; இம்மையும் மறுமையும் இன்றி வரும் ஒருவனிடத்து வருங்கால் அவனுக்கு இம்மையின்பமும் மறுமையின்பமும் இல்லாவாறு வருவான். நுகராமையால் இம்மையின்பமும் ஈயாமையால் மறுமையின்பமும் இல்லையென்பதாம். இன்மை, மறுமை என்பன ஆகுபெயர். பாவம்(வ) செய்தவன் பாவி(வ); கரிசு(பாவம்), கரிசன்(பாவி)- ஆண்பால் , கரிசி(பாவி-பெண்பால்) என்பன தென்சொற்கள். கொடியவனையே இங்குப் 'பாவி' என்றார்' 'இன்றிவிடும்' என்பது மணக்குடவ பரிப்பெருமாளர் கொண்ட பாடம்; வறுமையைக் கொடியான் என்று ஓர் ஆளாக உருவகித்தது ஆட்படையணி.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாமை என்ற ஒரு பாவி வருங்காலம் நிகழ்காலம் என்ற பேதமின்றி வரும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்.

Thirukkural in English - English Couplet:


Malefactor matchless! poverty destroys
This world's and the next world's joys.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

ThiruKural Transliteration:


inmai enavoru paavi maRumaiyum
immaiyum indri varum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore