திருக்குறள் - 557     அதிகாரம்: 
| Adhikaram: kotungonmai

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

குறள் 557 - திருவள்ளுவர் - ThiruValluvar

"inmaiyin innaadhu udaimai muraiseyyaa" Thirukkural 557 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்குரவினும் செல்வம் துன்பமாகும்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின். இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின், இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது. (தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப்படின் - முறை (நீதி ) செய்யாத அரசனின் கொடுங்கோலாட்சியின் கீழ்வாழின் ; உடைமை இன்மையின் இன்னாது - இன்பந்தரவேண்டிய செல்வநிலை துன்பந்தரும் இயல்புள்ள வறுமையினும் துன்பமான தாம். உடல் வருந்தப் பாடுபட்டுத் தேடிய செல்வத்தைக் கொடுங் கோலரசன் எளிதாய்க் கேட்டமட்டிற் கொடாவிடின், சிறைகாவற்கும் நையப்புடைப்பிற்கும் மட்டுமன்றிக் கொலைத் தண்டத்திற்கும் ஆளாக நேருமாதலின் , இன்னாமையில் தன்னேரில்லா இன்மையும் கொடுங்கோல் நாட்டில் உடைமையின் இனிய தென்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


செங்கோல் முறையினைச் செய்யாத, மன்னவனது கொடுங்கோலின் கீழ் வாழ்ந்தால் யாவர்க்கும் பொருள் வைத்திருப்பதானது பொருள் இல்லாமையினைக் காட்டிலும் அதிகமான துன்பத்தினைச் செய்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


துன்பத்திலும் துன்பமானது நல் ஆணைகள் கொண்டு ஆளாத ஆட்சியாரின் கிழ் உடைமைக் (குடியுரிமை)கொண்டு இருப்பது.

Thirukkural in English - English Couplet:


To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.

ThiruKural Transliteration:


inmaiyin innaadhu udaimai muRaiseyyaa
mannavan koaRkeezhp patin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore