திருக்குறள் - 1035     அதிகாரம்: 
| Adhikaram: uzhavu

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

குறள் 1035 - திருவள்ளுவர் - ThiruValluvar

"iravaar irappaarkkondru eevar karavaadhu" Thirukkural 1035 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் காத்தலின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கைசெய்து ஊண் மாலையவர் இரவார் - தம் கையால் உழுது உண்டலை இயல்பாகவுடையார் பிறரைத் தாம் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர் - தம்மை இரப்பார்க்கு அவர் வேண்டிய தொன்றனைக் கரவாது கொடுப்பர். ('செய்து' என்பதற்கு 'உழுதலை' என வருவிக்க. 'கைசெய் தூண் மாலையவர்' என்பது, ஒரு ஞான்றும் அழிவில்லாத செல்வமுடையார் என்னும் ஏதுவை உட்கொண்டு நின்றது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கை செய்து ஊண் மாலையவர் இரவார்-தம் கையால் உழுதுண்டலை இயல்பாக வுடைய உழவர் பிறரிடம் தாம் ஒன்றையும் இரவார்; இரப்பார்க்கு ஒன்று கரவாது ஈவர்-தம்மை யிரப்பவர்க்கெல்லாம் அவர் வேண்டியதொன்றை இல்லையென்னாது ஈவர். ’கை செய்து’ என்னும் மூன்றாம் வேற்றுமைத் தொகைக்கு, உழவு என்னும் செய்பொருள் அதிகாரத்தால் வந்தது. ’கைசெய் தூண் மாலை யவர்’ என்பது, ஒரு காலும் வற்றாத வருவாயுடையவரென்னும் ஏதுவைக் குறிப்பாய் உணர்த்தி நின்றது. "மாலை யியல்பே". என்றார் தொல்காப்பியர் ('சொல். உரி. 15). அது இன்று மானை என்று நெல்லை நாட்டில் உலகவழக்காக வழங்குகின்றது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பசி என்று இரவாமல் இரப்பார்க்கு கொடுப்பவர் சலிப்பின்றி உழைத்து உண்ணும் குளிர்ச்சியானவர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உழவரான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார்; தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள்.

Thirukkural in English - English Couplet:


They nothing ask from others, but to askers give,
Who raise with their own hands the food on which they live.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.

ThiruKural Transliteration:


iravaar irappaarkkondru eevar karavaadhu
kaiseydhooN maalai yavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore