திருக்குறள் - 920     அதிகாரம்: 
| Adhikaram: varaivinmakalir

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

குறள் 920 - திருவள்ளுவர் - ThiruValluvar

"irumanap pentirum kallum kavarum" Thirukkural 920 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும் திருமகளால் கடியப்பட்டாரது நட்பு. இது நல்குரவாவார் சார்வரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு. (இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் -இரு வேறுபட்ட மனத்தையுடைய விலைமகளிரும் கள்ளும் சூதும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாம். பொருள்மேல் விருப்பும் ஆள்மேல் விருப்பின்மையுமாக உடம்பாற் கூடுதலும் உள்ளத்தாற் கூடாமையும் ஒருங்கே யுடையார் மனத்தை 'இருமனம்' என்றார். வரைவின் மகளிர்போன்றே கள்ளுஞ் சூதும் பொருட் பகையாதலின் , உடன் கூறப்பட்டன.இதனால் அடுத்துவரும் ஈரதிகாரங்கட்கும் தோற்றுவாய் செய்யப்பட்டது. "பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப் பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே." (தொல்.534) என்றவாறு, இங்கு இருதுணையும் விரவிவந்த எழுவாய்கள் 'தொடர்பு' என்னும் அஃறிணை முடிபு கொண்டன.'திரு' ஆகுபெயர். மூவகையுறவுகளுள் ஏதேனுமொன்றிருப்பினும் , புதிதாகப் பொருள் சேராமையோடு இருந்த பொருளும் போய்விடும் என்பதாம். இந்நான்கு குறளாலும் விலைமகளிரொடு கூடுவோர் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


இருமனம் என்ற அலைபாயும் மனம் கொண்ட பெண்கள், கள், சூதாட்டம் என அடிமைபட்ட திரு நீக்கப்பட்டவர்கள் தொடர்புக் கொள்வர்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிரும், கள்ளும், சூதும், என்னும் மூன்று தொடர்புகளும், திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும்.

Thirukkural in English - English Couplet:


Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er,
Are those on whom the light of Fortune shines no more.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.

ThiruKural Transliteration:


irumanap peNtirum kaLLum kavaRum
thirunheekkap pattaar thotarpu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore