திருக்குறள் - 1114     அதிகாரம்: 

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குறள் 1114 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kaanin kuvalai kavizhndhu nilannoakkum" Thirukkural 1114 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


குவளைமலர் காணவற்றாயின் மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும். இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.) குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல் தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும். (பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.) .

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பாங்கற் கூட்டத்துச் சென்று சார்வான் கூறியது .) குவளை - குவளைப் பூக்கள் தாம் ; காணின் - காணுந் தொழிலையுடையனவாயின் ; மாண் இழை கண் ஒவ்வேம் என்று - வினைத்திறத்தால் மாட்சிமைப்பட்ட அணிகலன் களையுடைய இவள் கண்களை யாம் ஒவ்வேமென்று கருதி ; கவிழ்ந்து நிலன் நோக்கும் - அந்நாணத்தினாற் குனிந்து நிலத்தை நோக்கும் . பண்பாலன்றித் தொழிலாலும் ஒவ்வாமையாற் ' காணின் ' என்றும் . கண்டால் நாணும் என்பது தோன்றக் ' கவிழ்ந்து ' என்றும் , கூறினான் . காட்சியும் நாணமுமின்மையாற் செம்மாந்து மேல் நோக்கின என்பது தற்குறிப்பேற்றம் . ' மாணிழை ' அன்மொழித் தொகை .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே! எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


காணமுடியும் என்றால் குவளையும் கவிழ்ந்து நிலத்தை நோக்கும் உன்னத இழை கொண்ட கண்களுக்கு ஒப்பமாக மாட்டோம் என்று.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


குவளை மலர்கள், இவளைக் கண்டால், ‘இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம்’ என்று தலையைக் கவிழ்த்து நிலத்தை நோக்குமே!

Thirukkural in English - English Couplet:


The lotus, seeing her, with head demiss, the ground would eye,
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie'.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one".

ThiruKural Transliteration:


kaaNin kuvaLai kavizhndhu nilannoakkum
maaNizhai kaNNovvaem endru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore