திருக்குறள் - 1092     அதிகாரம்: 
| Adhikaram: kuripparidhal 2

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

குறள் 1092 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kankalavu kollum sirunhoakkam kaamaththil" Thirukkural 1092 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம், வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது. தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும். (தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கண் களவு கொள்ளும் சிறுநோக்கம்- இவள் கண்கள் எனக்குத் தெரியாமல் என்னை மறைவாகப் பார்க்கும் இடுகிய பார்வை ; காமத்தில் செம்பாகம் அன்று பெரிது- மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதியன்று, அதற்கும் மேற்பட்டதாம். தான் நோக்குங்கால் கவிழ்ந்து நிலம் நோக்கியும் தான் நோக்காக்கால் தன்னை நேர் நோக்கியும் வருதலாற் 'களவு கொள்ளும்' என்றும் தன்னை நோக்குவது இடுகியும் நேரங்குறுகியுமிருத்தலால் 'சிறுநோக்கம்' என்றும், அச்சிறுநோக்கம் தன்மேற் காதலை யுணர்த்துதலால் இனிப் புணர்தலுறுதிபற்றிச் 'செம்பாகமன்று பெரிது' என்றுங் கூறினான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறிய அளவுள்ள கள்ள விழிப் பார்வை காமத்தில் சரிபாதி அல்ல அதனைவிட பெரிது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


என்னை அறியாமல் என் மேல் நோக்குகின்ற இவள் அருகிய நோக்கமானது, காம உறவிலே சரிபாகம் ஆவதன்று; அதனிலும் மிகுதியானது ஆகும்.

Thirukkural in English - English Couplet:


The furtive glance, that gleams one instant bright,
Is more than half of love's supreme delight.

ThirukKural English Meaning - Couplet -Translation:


A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

ThiruKural Transliteration:


kaNkaLavu koLLum siRunhoakkam kaamaththil
sempaakam andru peridhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore