திருக்குறள் - 391     அதிகாரம்: 
| Adhikaram: kalvi

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

குறள் 391 - திருவள்ளுவர் - ThiruValluvar

"karka kasadarak karpavai katrapin" Thirukkural 391 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, கற்றபின் அதற்குத் தக நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க. ('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக் கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் 'கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே செய்தலினும் (நாலடி. 250)துறந்துழித் தவத்தான் மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை. சிறப்புடை மகற்காயின்கற்றல் வேண்டும் என்பதூஉம், அவனால் கற்கப்படும்நூல்களும், அவற்றைக் கற்குமாறும், கற்றதனால் பயனும்இதனாற் கூறப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கற்பவை கசடு அறக் கற்க-ஒருவன் தான் கற்க வேண்டிய நூல்களைப் பிழையறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க-அங்ஙனம் கற்றபின் அதற்கேற்ப ஒழுகுதலைக் கடைப்பிடிக்க. 'கற்பவை' என்றது பொதுக்கல்வியையும் தொழில் தொறும் வேறுபட்ட சிறப்புக்கல்வியையும் குறிக்கும். கசடறக் கற்றலாவது ஐயந்திரிபறத் தெளிவாயறிதல். நிற்றலாவது, பொதுக்கல்விக்கேற்ப அறநெறியிலொழுகுதலும் சிறப்புக்கல்விக்கேற்பச் செவ்வையாய்த் தொழில் செய்தலும் ஆம். இவ்விருவகை நடத்தையிலும் நிலைத்து நிற்க வேண்டு மென்றற்கு 'நிற்க' என்றார். 'கற்பவை' என்பது , ஒருவர்தம் உளப்பான்மைக்கும் உடல்நிலைமைக்கும் அகக்கரண வியல்பிற்கும் ஏற்றவாறு ஒரு தொழிலைத் தெரிந்து கொண்டு, அதற்குரியவற்றைக் கற்கவேண்டு மென்பதைக் குறிப்பாயுணர்த்தும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


படிக்க வேண்டும் பழுது இல்லாமல் படித்த பின் படித்ததற்கு ஏற்றபடி நடக்க வேண்டும்.

Thirukkural in English - English Couplet:


So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.

ThiruKural Transliteration:


kaRka kasadaRak kaRpavai katrapin
niRka adhaRkuth thaga.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore