திருக்குறள் - 935     அதிகாரம்: 
| Adhikaram: soodhu

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

குறள் 935 - திருவள்ளுவர் - ThiruValluvar

"kavarum kazhakamum kaiyum tharukki" Thirukkural 935 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


கவற்றினையும், கழகத்தினையும், கைத்தொழிலினையும் விரும்பி விடாதவர் முற்காலத்தினும் வறுவியரானார். கவறு - நெத்தம், கழகம் - உருண்டையுருட்டு மிடம், கைத் தொழில் - கவடி பிடித்தல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


இல்லாகியார் - முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர். (கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - சூதாட்டும் சூதாடுகளமும் கவறுருட்டுங் கைத்திறமும் பற்றிப் பெருமை பாராட்டிப் பற்றுள்ளங்கொண்டு ஆடியவரும்; இல்லாகியார் -- தம் எல்லாச்செல்வமும் இழந்தவராயினர், "கேடில் விழுச்செல்வம் கேடெய்து சூதாடல் ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண்." (நள. 6). என்றவாறு இது பண்டு சூதாடித் தம் பொருள் முற்றுமிழந்த அரசரையுஞ் செல்வரையும் நோக்கிப் பொதுப்படக் கூறியதாகும், கைத்திறமாவது வேண்டிய வாறெல்லாம் கவறுருட்டும் தேர்ச்சி,அத்தகைத் திறவோரும் தோற்பரென்பது புட்கரனும் சகுனியும் இறுதியில் தவறியதால் அறியப்படும், சிறப்பும்மை தொக்கது, 'கவறு', 'கை' என்பன ஆகுபெயர், பலர் கூடுங் கூட்டத்தைக் குறிக்கும் கழகம் என்னுஞ் சொல், அம்பலம், மன்றம் என்னுஞ் சொற்கள்போல் இங்குக் கூடுமிடத்தைக் குறித்தது, கல-கள-(களகு)-கழகு-கழகம், தருக்குதலும் இவறுதலும் கைத்திறமையின் விளைவாகும், பாண்டவர்க்குச் சூதாடும் வழக்கமும் விருப்பமும் இருந்ததில்லையென்பதும், அதற்கு மாறாக அதன்மேல் வெறுப்பேயிருந்த தென்பதும், "அடியு மாண்மையும் வலிமையுஞ் சேனையு மழகும் வென்றியுந் தத்தங் குடியு மானமுஞ் செல்வமும் பெருமையுங் குலமு மின்பமுந் தேசும் படியு மாமறை யொழுக்கமும் புகழுமுன் பயின்ற கல்வியுஞ் சேர மடி யு மான்மதி யுணர்ந்தவர் சூதின்மேல் வைப்ப ரோமனம் வையார்," என்று (வில்லி. பார. சபா. சூது.65) தருமன் விதுரனிடங் கூறியதினின்று அறியப்படும், ஆதலால், " அவ் விவறுதலாற் பாண்டவர் தம்மரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினரென அனுபவங் காட்டியவாறு," என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாதென்க, பாண்டவர் சூதாகச் சூதில் ஈடுபடுத்தப்பட்டாரேயன்றித் தாமாக விரும்பியாடினாரல்லர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கவர்ந்து இழுக்கும் சூதாட்டக் கழகமும், சூதாட்டக் கருவிகளைக் கொண்ட கையும் அறிந்தவர் ஒன்றுமற்றவராக மாறுவார்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், சுவற்றினையும், அ·தாடும் களத்தினையும், கைத்திறனையும், மேற்கொண்டு விடாதவரே.

Thirukkural in English - English Couplet:


The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,
Thirsting for gain- the men in other days who came to nought.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).

ThiruKural Transliteration:


kavaRum kazhakamum kaiyum tharukki
ivaRiyaar illaaki yaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore