திருக்குறள் - 1005     அதிகாரம்: 
| Adhikaram: nandriyilselvam

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.

குறள் 1005 - திருவள்ளுவர் - ThiruValluvar

"koduppadhooum thuyppadhooum illaarkku adukkiya" Thirukkural 1005 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை. (இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொடுப்பதும் துய்ப்பதும் இல்லார்க்கு -பிறருக்கீவதும் தாம் நுகர்வது மாகிய இரண்டுமில்லாதவருக்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல்-கோடிக் கணக்கான செல்வமிருப்பினும் அது செல்வமிருப்பதாகாது. செல்வத்தின் இரு பயனுமின்மையால் ' இல் ' என்றார். இன்பத்தினும் அறஞ் சிறந்தமையால் முற்கூறப்பட்டது. ' கோடி' அளவையாகு பெயர். ' கொடுப்பதூஉம் ' , ' துய்ப்பதூஉம் ' இன்னிசை யளபெடைகள்.உம்மை உயர்வு சிறப்பு. "எனதென தென்றிருக்கு மேழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும் - தனதாயின் தானு மதனை வழங்கான் பயன்றுவ்வான் யானு மதனை யது" (நாலடி.276) என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கொடுத்து மகிழ்வதும் அனுபவித்து மகிழ்வதும் இல்லாதவருக்கு தொடர்ந்து செல்வம் கோடி உண்டாயினும் வீண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை.

Thirukkural in English - English Couplet:


Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.

ThiruKural Transliteration:


koduppadhooum thuyppadhooum illaarkku adukkiya
koatiyuN daayinum il.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore