திருக்குறள் - 1221     அதிகாரம்: 
| Adhikaram: pozhudhukantirangal

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

குறள் 1221 - திருவள்ளுவர் - ThiruValluvar

"maalaiyo allai manandhaar uyirunnum" Thirukkural 1221 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி, அதனைக் கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' (பழமொழி.2) என்பதுபற்றிப் பகற்பொழுது ஆற்றிஇருந்தாட்கு உரியதாகலின், இது கனவு நிலை உரைத்தலின் பின் வைக்கப் பட்டது.] (பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(பொழுதொடு புலந்தது) பொழுது - மாலைப்பொழுதே!; நீ மாலையோ அல்லை - நீ முன்னாட்களில் வந்த மாலைப்பொழுதே யல்லை ; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - காதலரை மணந்து பிரிந்த மகளிரைக் கொல்லும் இறுதிக் காலமாகவே யிருக்கின்றாய், இந்நாள். முன்னாள் காதலரொடு கூடியிருந்த நாள்.தன்னைப் போற் காதலரைப் பிரிந்த பிறரையும் உளப்படுத்தி 'மணந்தார்' என்றாள். 'வாழி' யென்பது எதிர்மறைக்குறிப்பு.வேலை எல்லை; இங்கு வாழ்நாளெல்லையைக் குறித்தது.வேலையென்பதற்கு வேலாயிருந்தாய் என்றுரைப்பர் மணக்குடவ பரிதி பரிப்பெருமாளார்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மாலைப் பொழுதோ இல்லை மணமானவர்களின் உயிரை உண்ணும் வேலையோ உன்னை வாழ்த்துகிறேன் பொழுதே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்!

Thirukkural in English - English Couplet:


Thou art not evening, but a spear that doth devour
The souls of brides; farewell, thou evening hour!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women

ThiruKural Transliteration:


maalaiyo allai manandhaar uyirunnum
vaelainee vaazhi pozhudhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore