திருக்குறள் - 1116     அதிகாரம்: 

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

குறள் 1116 - திருவள்ளுவர் - ThiruValluvar

"madhiyum madandhai mukanum ariyaa" Thirukkural 1116 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு இவ்விரண்டினையும் அறியாது தன்னிலையினின்றுங் கலங்கித் திரியா நின்றன மீன்கள். மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இம் மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது.) மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும் இதுமதி, இதுமுகம் என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன. (ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இரவுக் குறிக்கண் நிலாவைக் கண்டு சொல்லியது ) மீன் - விண்மீன்கள் ; மதியும் மடந்தை முகனும் அறியா - தம் தலைமைச் சுடராகிய மதிக்கும் எம் காதலி முகத்திற்கும் வேறுபாடு பெரிதாயிருந்தும் அதனை அறிய மாட்டாது ; பதியின் கலங்கிய - மயங்கித் தம் நிலையினின்றும் பெயர்ந்து அங்குமிங்குந் திரிகின்றன . இரவுக்குறியாவது , பாங்கியிற் கூட்டக் காலத்தில் தலைமகனுந் தலைமகளும் இரவிற் கூடுதற்குக் குறித்த இடம் . ஒரிடத்து நிலைத்து நில்லாது எப்போதும் இயங்குதல்பற்றிப் ' பதியிற் கலங்கிய ' என்றான் . இதற்கு மதிமுக வேறுபாடறியாமைக் கரணியங் காட்டியது தற்குறிப் பேற்றம் . இக்குறட்கு "இனி இரண்டனையும் பதியிற்கலங்காத மீன்களறியு மல்லது கலங்கின மீன்களறியாவென்றுரைப்பினு மமையும் ". என்று பரிமேலழகர் கூறிய மற்றோருரை அத்துணைச் சிறந்ததன்று .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


முழு நிலவையும் பருவ பெண்ணின் முகத்தையும் வேறுபடுத்தி அறியாமல் நிலை கலங்கியது மீன்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே!

Thirukkural in English - English Couplet:


The stars perplexed are rushing wildly from their spheres;
For like another moon this maiden's face appears.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.

ThiruKural Transliteration:


madhiyum madandhai mukanum aRiyaa
padhiyin kalangiya meen.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore