திருக்குறள் - 1119     அதிகாரம்: 

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

குறள் 1119 - திருவள்ளுவர் - ThiruValluvar

"malaranna kannaal mukamoththi yaayin" Thirukkural 1119 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மதியே! நீ மலர்போலுங் கண்களை யுடையாளது முகத்தை ஒப்பையாயின், பலர் காணுமாறு தோன்றாதொழிக. இது மதி ஒளியும் வடிவும் ஒத்ததாயினும் குணத்தினாலே ஒவ்வாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) மதி - திங்களே ! ; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் - இத்தாமரை மலர் போலுங் கண்ணையுடையாளின் முகத்தை யொக்க நீவிரும்பு வாயானால் ; பலர் காணத்தோன்றல் - இனியாகிலும் எல்லாருங் காணத்தோன்றாதே , நான் மட்டுங் காணத்தோன்று . ஏற்கெனவேயுள்ள வடிவு நிலையின்மையுங் களங்கமுமாகிய குற்றங்களுடன் , பொதுமகள் முகம்போலப் பலருங்கண் டின்புறுதற் கேதுவான பரத்தைமையுங் கூறியவாறு . பலர் காணத்தோன்றாமை கூடாமையின் முகமொத்த லில்லையென்பதாம் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட) பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மலர் போன்ற கண்களைக் கொண்டவள் போல் முகம் ஒத்து இருக்கும் பொழுது பலர்காணத் தோன்று நிலவே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மதியமே! மலர்போன்ற கண்களையுடைய இவளின் முகத்திற்கு நீயும் ஒத்திருப்பாய் ஆயின், பலரும் காணுமாறு இனி வானத்தில் தோன்றாதிருப்பாயாக!

Thirukkural in English - English Couplet:


If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me,
Shine for my eyes alone, O moon, shine not for all to see!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all.

ThiruKural Transliteration:


malaranna kaNNaaL mukamoththi yaayin
palarkaaNath thoandral madhi.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore