திருக்குறள் - 244     அதிகாரம்: 
| Adhikaram: arulutaimai

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

குறள் 244 - திருவள்ளுவர் - ThiruValluvar

"mannuyir ompi arulaalvaarkku illenpa" Thirukkural 244 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவ தில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர். (உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு - மற்ற உயிர்களையெல்லாம் பேணி அவற்றினிடத்து அருள் பூண்பவனுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப - தன்னுயிர் அஞ்சுவதற் கேதுவான தீவினைகள் இரா என்று கூறுவர் அறிந்தோர். "தன்னுயிர் போல் மன்னுயிரையும் எண்ண வேண்டும்" . என்னும் பழமொழியில், மன் என்னுஞ் சொல் மற்ற என்று பொருள் படுதலால், அதை யொத்த இவ்விடத்தும் அப்பொருள் உரைக்கப்பட்டது. அஞ்சும் வினை தன்னதாகவும் பிறரதாகவுமிருக்கலாம். தன் வினையாயின் மறுமைத் துன்பமும் பிறர் வினையாயின் இம்மைத் துன்பமும் நோக்கிய அச்சமாகும். உயர்ந்த அருளறம் பூண்டோன் தீவினை செய்யான் என்பதும், அவனால் அருள் செய்யப் பெற்றவனும் நன்மைக்குத் தீமை செய்யான் என்பதும், கருத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நிலையான உயிர்களைப் போற்றி அவற்றினிடம் அருளுடையவனுக்குத் தன உயிர் அஞ்சக் கூடிய தீவினைகள் உண்டாகா என்று அறிந்தோர் சொல்லுவர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பூமியில் உள்ள உயிர்களை போற்றி வாழ செய்பவருக்கு இல்லை எனலாம் தனது உயிர் துன்புறும் செயல்.

Thirukkural in English - English Couplet:


Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).

ThiruKural Transliteration:


mannuyir Ompi aruLaaLvaarkku illenpa
thannuyir anjum vinai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore