திருக்குறள் - 222     அதிகாரம்: 
| Adhikaram: eekai

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

குறள் 222 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nallaaru eninum kolaldheedhu melulagam" Thirukkural 222 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


கொளல் நல் ஆறு எனினும் தீது - பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழியென்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாதென்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது. உம்மை ஈரிடத்தும் எதிர்மறை, கொடுத்தல் தருதல் என்னும் சொற்களினும் ஈதல் என்னும் சொல்லே இவ்வதிகாரத்திற்கு ஏற்றதாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


இராப்பது (யாசிப்பது) நன்னெறியாகும் என்று சொல்லுபவர்கள் இருந்தாலும் அது தீதான செயலாகும். ஈகையினைச் செய்வதால் மேலுலகம் அடைய முடியாதென்று சொன்னாலும் ஈதலே நன்று.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்ல நதி என்றாலும் முழ்கிவிடுதால் கெடுதலாகும். மேல ஒரு உலகம்(சுவர்க்கம்) இல்லை என்றாலும் கொடுப்பதே நன்மை தரும்.

Thirukkural in English - English Couplet:


Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.

ThirukKural English Meaning - Couplet -Translation:


To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.

ThiruKural Transliteration:


nallaaRu eninum koLaldheedhu maelulakam
illeninum eedhalae nandru.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore