திருக்குறள் - 469     அதிகாரம்: 
| Adhikaram: therindhuseyalvakai

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

குறள் 469 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nandraatra lullunh thavurundu avaravar" Thirukkural 469 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து. இதுவுமோரெண்ணம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின். (நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் அவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் சிறப்புக்குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கேற்பச்செய்யாவிடின் ; நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு - வேற்றரசரிடத்து நல்ல ஆம்புடைகளைக் கையாளுமிடத்தும் குற்ற முண்டாம் . இன் சொல்லுங் கொடையும் , ஏதும் வருத்தத்திற்கும் இழப்பிற்கும் இடமின்றி , எல்லார்க்கும் ஏற்றதும் இன்பந்தருவது மாயிருத்தலின் , நல்லாம்புடைகளாம் . அவற்றை அவரவர் பண்பறிந்தாற்றாமையாவது, அவற்றிற்கு உரியாரல்லாதாரிடத்துக் கையாளுதல் . 'தவறு' அவ்வினை முடியாமை அல்லது முடிந்தும் பயனின்மை .

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


அவரவர் குணங்களை ஆராய்ந்து அவற்றிற்கேற்பச் செய்யாமற் போனால், பிறர்க்கு நல்லவற்றையே செய்தாலும் குற்றம் உண்டாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நன்மை செய்தாலும் தவறு நடப்பதுண்டு ஒவ்வொரு தனிமனித பண்பை அறியாமல் செய்யப்படுவதால்.

Thirukkural in English - English Couplet:


Though well the work be done, yet one mistake is made,
To habitudes of various men when no regard is paid.

ThirukKural English Meaning - Couplet -Translation:


There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

ThiruKural Transliteration:


nandraatra luLLunh thavuRuNdu avaravar
paNpaRinh thaatraak kadai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore