திருக்குறள் - 1111     அதிகாரம்: 

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

குறள் 1111 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nanneerai vaazhi anichchamae ninninum" Thirukkural 1111 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண். இஃது உடம்பினது மென்மை கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது , தலைமகன் தலைமகள் நலத்தைப் புனைந்து சொல்லியது . இது , புணர்ச்சி மகிழ்ந்துழி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தலின் பின் வைக்கப்பட்டது .] (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை - அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் - அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மெல்லிய இயற்கையை உடையவள். (அனிச்சம்: ஆகுபெயர், 'வாழி' என்பது உடன்பாட்டுக் குறிப்பு. இனி 'யானே மெல்லியள்' என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அது பொழுது உற்றறிந்தானாகலின், ஊற்றின் இனி்மையையே பாராட்டினான், 'இன்னீரள்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


[ இயற்கைப் புணர்ச்சி யிறுதிக்கட் சொல்லியது ] அனிச்சமே நன்னீரை - அனிச்சப் பூவே ! நீ மோப்பக் குழையும் நாணமுடைமையால் மற்றெல்லாப் பூவினும் நல்ல தன்மையை யுடையை ; வாழி - ஆதலால் நீ நீடுவாழ்க ! யாம் வீழ்பவள் நின்னினும் மெல்நீராள் - ஆனால் , எம்மால் விரும்பப் பட்டவளோ உன்னைவிட மெல்லிய தன்மையுடையவள் . இதை இன்றறிந்துகொள் . இது காமவின்ப மகிழ்ச்சி மயக்கத்தால் , கேட்குந போலவுங்கிளக்குந போலவும் அஃறிணை மருங்கின் அறைந்தது . இதுபோற் பின் வருவனவற்றிறகும் ஈதொக்கும் . ' அனிச்சம் ' ஆகுபெயர் . இவ்வுலகில் யானே மென்மையிற் சிறந்தேன் என்னும் செருக்கையினி யொழிவாயாக என்பது குறிப்பு . தழுவலால் ஊற்றினிமையைச் சற்று முன்பு அறிந்தானாகலின் . அதைப் பாராட்டினான் , இன்னீரள் என்னும் பாடம் சிறந்ததன்று .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன்; ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள் என் காதலி.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நல்ல நிலையில் வாழும் அணிச்ச மலரே உன்னைக் காட்டிலும் மென்மையானவள் என்னை வீழ்த்துபவள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய்! நீ வாழ்க! எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னைக் காட்டிலும் மிகவும் மென்மையான தன்மையினள்!

Thirukkural in English - English Couplet:


O flower of the sensitive plant! than thee
More tender's the maiden beloved by me.

ThirukKural English Meaning - Couplet -Translation:


May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you.

ThiruKural Transliteration:


nanneerai vaazhi anichchamae ninninum
menneeraL yaamveezh pavaL.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore