திருக்குறள் - 194     அதிகாரம்: 
| Adhikaram: payanila sollaamai

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

குறள் 194 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nayansaaraa nanmaiyin neekkum payan" Thirukkural 194 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பல்லாரகத்துப் பயன் சாராப் பண்பு இல்சொல் - ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - நேர்மையொடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும். சொற் பண்புகள் ஓசையினிமை , இலக்கண வழுவின்மை, பொருள் நன்மை முதலியன. சொல்லும் என்பது சொல்லெச்சம். 'சாரா' இரண்டனுள் முன்னது ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; பின்னது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


நற்பயன் சேராத குணமில்லாத சொற்களைப் பலரிடத்திலும் ஒருவன் சொல்லுவானானால், அப்படிப் பட்டவனை, அவை நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நேர்மையற்றவை நன்மை தருவதை நீக்கிவிடும். பயன் தராது பண்பற்ற சொல் பலர் இடத்தை அடைத்தும்.

Thirukkural in English - English Couplet:


Unmeaning, worthless words, said to the multitude,
To none delight afford, and sever men from good.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.

ThiruKural Transliteration:


nayansaaraa nanmaiyin neekkum payansaaraap
paNpilsol pallaa rakaththu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore