திருக்குறள் - 219     அதிகாரம்: 
| Adhikaram: oppuravaridhal

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

குறள் 219 - திருவள்ளுவர் - ThiruValluvar

"nayanutaiyaan nalkoorndhaa naadhal" Thirukkural 219 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நயனுடையான் நல்கூர்ந்தா னாகின்றது செய்ய வேண்டுவன செய்யாதே யமைய மாட்டாத இயல்பாம். இது செல்வங் குறைபடினுஞ் செய்வரென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது, செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவாளன் வறியவனாதலாவது; செயும்நீர செய்யாது அமைகலா வாறு - தவிராது செய்யும் தன்மையவான வேளாண்மைச் செயல்களைச் செய்யவியலாது அமைதியற்றிருக்கும் நிலைமையே. அமைதியற்றிருக்கும் நிலைமையாவது வருந்துதல். ஒப்புரவுசெய்யவியலாவாறு செல்வம் அற்றவிடத்து, பிறரை நுகர்வியாமைபற்றியேயன்றித் தான் நுகராமை பற்றி வருந்துவதில்லை யென்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நற்சிந்தை உள்ளவன் நீண்ட அமைதியடைவது செய்ய வேண்டியதை செய்யமுடியாத சுழல் அமையும் பொழுதே.

Thirukkural in English - English Couplet:


The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.

ThiruKural Transliteration:


nayanutaiyaan nalkoorndhaa naadhal seyumnheera
seyyaadhu amaikalaa vaaRu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore