திருக்குறள் - 1049     அதிகாரம்: 
| Adhikaram: nalkuravu

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

குறள் 1049 - திருவள்ளுவர் - ThiruValluvar

"neruppinul thunjalum aagum nirappinul" Thirukkural 1049 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்-ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது-ஆயின், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது. நெருப்பினும் வறுமை கொடிது என்றவாறு. இதுவும் அவன் துயரக் கூற்று. உம்மை யிரண்டனுள் முன்னது அருமை; பின்னது முற்று. இனி, ’யாதொன்றும்’ என்பது ஒரு சிறிதும் எனினுமாம். இவ்வும்மை இழிவு சிறப்பு. இத்தொண் (ஒன்பது) குறளாலும், வறுமையின் கொடுமை கூறப்பட்டது. ’நிரப்பு’ மேற் கூறியதே.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெருப்பில் தூங்குவது சாத்தியப்படலாம் நிறைவற்ற நிலையில் எவ்வகையிலும் கண்ணுறக்கம் கொள்வது கடினம்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்த போது, எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.

Thirukkural in English - English Couplet:


Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.

ThirukKural English Meaning - Couplet -Translation:


One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

ThiruKural Transliteration:


neruppinuL thunjalum aagum nirappinuL
yaadhondrum kaNpaadu aridhu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore