திருக்குறள் - 1328     அதிகாரம்: 
| Adhikaram: ootaluvakai

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

குறள் 1328 - திருவள்ளுவர் - ThiruValluvar

"ootip perukuvam kolloa nudhalveyarppak" Thirukkural 1328 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவுமது) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய வுப்பு- இதுபோது இவள் நெற்றி வெயர்க்குமளவு செய்த கலவி்யின்கண் உள்ள இனிமையை ; ஊடிப்பெருகுவமோ -இன்னுமொருகால் இவள் ஊடி யாம் பெறவொண்ணுமோ! இனிமை ஒருங்கே நுகரும் ஐம்புலவின்பம். இனி அவ்வப்போது அரிதென்று பெற்றதன் சிறப்புக் கூறியவாறு. நுதல் வெயர்ப்பச் செய்தது ஒரு சிறந்த கலவிவகை யெனினுமாம். 'கொல்' அசைநிலை 'ஓ' ஐயவினா , 'இவளூடி' என்பது தனிநிலை யமைப்பு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஊடலினால் பெரும் சிறப்பு நெற்றி வெயர்க்க கூடி மகிழ்வதால் வரும் உப்பு.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நெற்றி வெயர்வு அரும்பும்படி காதலருடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து, அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும் போது பெறுவோமோ?

Thirukkural in English - English Couplet:


And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.

ThiruKural Transliteration:


ootip perukuvam kolloa nudhalveyarppak
koodalil thoandriya uppu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore