திருக்குறள் - 1178     அதிகாரம்: 
| Adhikaram: kanvidhuppazhidhal

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

குறள் 1178 - திருவள்ளுவர் - ThiruValluvar

"paenaadhu pettaar ularmanno matravark" Thirukkural 1178 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவு முளவோ?

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(காதலர் பிரிந்து போனாரல்லர், அவர் உடலால் ஆங்கிருப்பினும் உள்ளத்தால் ஈங்குளர். அவரைக் காணுமளவும் ஆற்றியிரு என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணாது பெட்டார் உளர்-(ஆம். நீ சொல்வது உண்மைதான்.) நெஞ்சத்தில் நேயங்கொள்ளாது வாய்ச்சொல்லால் மட்டும் நம்மை விரும்பியவர் இங்கே யுள்ளார் ; மற்று அவர்க்காணாது கண் அமைவு இல-ஆயின் அவ்வுண்மைக்கு மாறாக, என் கண்கள் அவரைக் காணாமையால் அமைதியில்லா திருக்கின்றன. பிரிவாற்றாமை யறிந்தும் பிரிந்துபோனமையாற் 'பேணாது' என்றும், முன்னர் நலம் பாராட்டிப் "பிரியேன், அஞ்சேல்" என்று வன்புறையுங் கூறினாராகலின் 'பெட்டார்' என்றும் கூறினாள். யான்ஆற்றியிருக்கவும் என் கண்கள் அவரைக் காணும் வேட்கை மிகுதியால் ஆற்றாதிருக்கின்றன என்பதாம். 'மன்' ஓழியிசைக் கண்வந்தது என்றும் 'ஒகாரம்' அசைநிலை யென்றுங் கூறுவர். அவர் உண்மையில் இங்கிருந்தால் என் கண்கள் அவரைக் கண்டு அமைதியுற்றிருக்கும் என்பதை ஒழியிசையாகக் கொள்க. 'மற்று' மாற்றுப் பொருளில் வந்தது. 'கொண்கனை' என்பது காலிங்கர் கொண்ட பாடம்.. "இனிக் கொண்கனை யென்று பாடமாயின், என் கண்கள் தம்மைக் காணா தமைகின்ற கொண்கனைத் தாங்காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாமவரை விழைந்தார் உலகத்துளரோ வென் றுரைக்க,' என்னும் பரிமேலழகருரை கொள்ளத்தக்கதே. இதற்கு 'மன்'அசைநிலை யென்பர் அவர்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உறவு பேணாமல் விலகி ஒருவர் இருக்கின்றார் என்றால் மற்றவர்கள் காணாதபடி அமைதியாக இருக்கவில்லையே கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் என்ன பயன்? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே!

Thirukkural in English - English Couplet:


Who loved me once, onloving now doth here remain;
Not seeing him, my eye no rest can gain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

ThiruKural Transliteration:


paenaadhu pettaar ularmanno matravark
kaanaadhu amaivila kan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore