திருக்குறள் - 1234     அதிகாரம்: 
| Adhikaram: uruppunalanazhidhal

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

குறள் 1234 - திருவள்ளுவர் - ThiruValluvar

"panai neengip paindhoti soarum thunaineengith" Thirukkural 1234 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளை- மரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. (பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள்- தம் துணைவர் நீங்கியதனால் அவராற்பெற்ற செயற்கை யழகேயன்றிப் பழைய இயற்கை யழகு மிழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும்- தம் பருமை குன்றியதனாற் பசும்பொன் வளையல்கள் கழலச் செய்யும். 'சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. முதலொடு சினைக்குள்ள ஒற்றுமைபற்றித் 'துணை நீங்கி' என்றாள். அன்று அவர் பிரிந்தாரென்று அவரது அன்பின்மையை உணர்த்தின; இன்று அவர் குறித்த பருவத்து வந்திலரென்று அவரது பொய்ம்மையை உணர்த்துகின்றன. இங்ஙனம் அவர் மேற் குறைகூறுதற்கு அவரே இடந்தந்துள்ளார் என்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பருமன் குறைந்து வளையல் போல் மெலிந்துவிடும் துணை நீங்கிப் பழைய நினைப்பில் வாடிய தோள்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


தமக்கு துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் சுழலச் செய்கின்றனவே!

Thirukkural in English - English Couplet:


When lover went, then faded all their wonted charms,
And armlets' golden round slips off from these poor wasted arms.

ThirukKural English Meaning - Couplet -Translation:


In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

ThiruKural Transliteration:


panai-neengip paindhoti soarum thunaineengith
tholkavin vaadiya thoal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore