திருக்குறள் - 1295     அதிகாரம்: 
| Adhikaram: nenjotupulaththal

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

குறள் 1295 - திருவள்ளுவர் - ThiruValluvar

"peraaamai anjum perinpirivu anjum" Thirukkural 1295 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு. இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


(வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சம் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும் , 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(வாயிலாகச் சென்ற தோழிகேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சும்-காதலரைப் பெறாதபோது அப்பெறாமைக்கு அஞ்சுகின்றது ; பெறின் பிரிவு அஞ்சும்-பெற்றபோதோ எதிர்காலத்தில் நேரக் கூடிய பிரிவைக் கருதிக்கொண்டு அதற்கு அஞ்சுகின்றது;என் நெஞ்சு அறா இடும்பைத்து- இங்ஙனம் என் உள்ளம் தீராத துன்பத்தையுடையதா யிருக்கின்றது. பெறாதபோது கலவியின்மை பற்றியும் பெற்றபோது கலவிதொடராமை பற்றியும் அச்சம் உண்டாவதால் , என் வாழ்க்கை எப்போதும் துன்பவாழ்க்கையே என்பதாம். அஞ்சுதல் அஞ்சி வருந்துதல் , ' பெறாஅமை,' அறாஅ இசைநிறை யளபெடைகள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உறவு பெறாமல் இருந்தாலும் அஞ்சும், பெற்றாலும் அஞ்சும் தீராத துன்பம் தருவது ஏன் என் நெஞ்சே.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அவரைப் பெறாத போதும் அஞ்சும்; பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது

Thirukkural in English - English Couplet:


I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.

ThirukKural English Meaning - Couplet -Translation:


My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.

ThiruKural Transliteration:


peraaamai anjum perinpirivu anjum
araaa idumpaiththen nenju.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore