திருக்குறள் - 633     அதிகாரம்: 
| Adhikaram: amaichchu

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

குறள் 633 - திருவள்ளுவர் - ThiruValluvar

"piriththalum paenik kolalum pirindhaarp" Thirukkural 633 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மாற்றரசரிடத்து உள்ளாரையும் நட்பாகிய அரசரையும் அவரிடத் தினின்று பிரித்தலும், அவ்வாறு பிரிக்கப்பட்டாரை விரும்பித் தம்மிடத்துக் கொளலும், தம்மிடத்து நின்று பிரிந்தாரைக் கூட்டிக் கொளலும் வல்லவன் அமைச்சனாவான்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரித்தலும் - வினை வந்துழிப் பகைவர்க்குத் துணையாயினாரை அவரிற் பிரிக்க வேண்டின் பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம்பாலாரை அவர் பிரியாமல் கொடை இன்சொற்களால் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்னே தம்மினும் தம் பாலாரினும் பிரிந்தாரை மீண்டும் பொருத்த வேண்டின் பொருத்தலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (இவற்றுள் அப்பொழுதை நிலைக்கு ஏற்ற செயலறிதலும், அதனை அவர் அறியாமல் ஏற்ற உபாயத்தால் கடைப்பிடித்தலும் அரியவாதல் நோக்கி, 'வல்லது' என்றார். வடநூலார், இவற்றுள் பொருத்தலைச் 'சந்தி' என்றும் பிரித்தலை 'விக்கிரகம்' என்றும் கூறுப.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


பிரித்தலும் -போர் வந்தவிடத்துப் பகைவரின் துணைவரை அவரினின்று பிரித்தலும்; பேணிக்கொளலும் - தம் துணைவரைத் தம்மினின்று பிரியாவாறு இன்சொல்லாலும் கொடையாலும் பேணிக்கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலும் - முன்பு தம்மினின்றும் தம் துணைவரினின்றும் பிரிந்து போனவரைத்தேவையாயின் திரும்பவும் சேர்த்துக் கொள்ளுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். பிரித்தலுள் , பகைவரின் துணைவரை ஒருவரோடொருவர் கூடாவாறு வேறுபடுத்தலும் ; பேணிக்கொளலுள், புதிதாகத் தமக்கு நட்பாக வருபவரைப் போற்றிக் கொள்ளுதலும்; பிரிந்தார்ப் பொருத்தலுள், உண்மை யன்பில்லாதவ ரிடத்தில் தாமும் அன்புள்ளவர் போல் நடித்தலும்; அடங்கும். இனி, இரசியமும் சீனமும் போலப் பகைவர் தாமாகப் பிரிந்துபோம் போது அப்பிரிவினையை ஊக்குதலும் , பிரித்தலுள் அடங்கும். இங்ஙனம் அவ்வப்பொழுதை நிலைக்கேற்றவாறும், சிலவற்றை மறைவாகவும் சில வற்றைவெளிப் படையாகவும் , செய்யவேண்டியிருத்தலின், 'வல்லது' என்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தக்க காலத்தில் பிரிக்க வேண்டியவர்களைப் பிரித்தலும், வேண்டியவர்களை நன்கு ஆதரித்துப் பிரியாமல் வைத்துக் கொள்ளலும், பிரிந்தவர்களைப் பொறுத்த வேண்டின் பொருத்தலும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தேவையற்றதை விலக்குவதும், தேவையானதை ஏற்ப்பதும், பிரிந்துப் போனவர்களை பொருத்தலும் வல்லமையுடன் செயல்படுவதே அமைச்சு.

Thirukkural in English - English Couplet:


A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him).

ThiruKural Transliteration:


piriththalum paenik koLalum pirindhaarp
poruththalum valla thamaichchu.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore