திருக்குறள் - 246     அதிகாரம்: 
| Adhikaram: arulutaimai

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

குறள் 246 - திருவள்ளுவர் - ThiruValluvar

"porulnheengip pochchaandhaar enpar arulnheengi" Thirukkural 246 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முற்பிறப்பின்கண் அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்தொழுகினவர் இப்பிறப்பின்கண் பொருளினின்று நீங்கி மறவியுமுடையவரென்று சொல்லுவர். இது பொருளில்லையாமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்-உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுவார்; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர்-முற்பிறப்பில் அறமாகிய உறுதிப்பொருளைத் தேடாது இப்பிறப்பிலும் அதை மறந்தவர் என்பர் அறிவுடையோர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


உயிர்களிடம் காட்டப்படும் அருளிலிருந்து நீங்கிக் கொடுமைகளைச் செய்து நடப்பவர்கள் உறுதிப் பொருளைச் செய்யாமல் தாம் துன்புறுகின்றமையை மறந்தவர்கள் என்று செல்லப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


பொருள் அற்று மறதி நிலை அடைவர் அருள் அற்று தீமைகளை செய்து வருபவர்.

Thirukkural in English - English Couplet:


AGain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer).

ThiruKural Transliteration:


poruLnheengip pochchaandhaar enpar arulnheengi
allavai seydhozhuku vaar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore