திருக்குறள் - 18     அதிகாரம்: 
| Adhikaram: vaansirappu

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

குறள் 18 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sirappodu poosanai sellaadhu vaanam" Thirukkural 18 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


வானம் வறக்குமேல் - மழை பெய்யாவிடின்; ஈண்டு வானோர்க்கும் பூசனைசிறப்பொடு செல்லாது - இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டைவிழாவும் நடைபெறா. அன்றாடு பூசை, கதை நிகழ்ச்சி குறியாதும் கொண்டாட்ட மின்றியும் ஒரு சிலரான அக்கம் பக்கத்தார் மட்டும் கலந்தும் கலவாமலும், வழக்கம்போற் சிற்றளவான வழிபாடாகக் கோவிற்குள் மட்டும் நடைபெறுவது; ஆட்டைவிழா ஒருகதை நிகழ்ச்சி குறித்தும் கொண்டாட்டத்துடனும் நாட்டு மக்களையெல்லாம் வரவழைத்தும், பேரளவாக ஊர்வலஞ்செய்து நடைபெறுவது. உம்மை சிறப்பும்மை. பூசுதல் = கழுவுதல், தெய்வப் படிமையை நீரால் துப்புரவாக்குதல். பூசு-பூசி. பூசித்தல்=பூச்சாத்தியும் தேங்காய் பழம் முதலியன படைத்தும் வழிபடுதல். உழவு என்பது பயிர்த்தொழிலின் பின்வினைகளையும் குறித்தல்போல், பூசித்தல் என்பதும் வழிபாட்டின் பின்வினைகளையும் குறித்தது. பூசி-பூசை. ஒ.நோ: ஆசு (பற்று) -- ஆசி (அவாவு)-ஆசை (அவா).பூசி-பூசனை,பூசனம். ஐ,அனை,அனம் என்பன தமிழ் ஈறுகளே. பூசை-பூசாரி. ஆரி தலையாரி என்பதிற்போல் ஓர் ஈறு. பூசாச்சாரி (பூசை+ஆச்சாரி) என்னும் வழக்கு வடமொழியிலுமில்லை. பூ செய் என்பது பூசை என்றாயிற்றென்று கொள்வது பொருந்தாது. பூசி-பூஜ் (வ.), பூசை-பூஜா(வ.), பூசனம்-பூஜன(வ.), பூசனை-பூஜனா(வ.). வேத ஆரியர்க்கு வேள்வி வேட்டலேயன்றிப் படிமைப்பூசையும் கோவில் வழிபாடும் இல்லை. பூஜ் என்னும் சொல்லும் வேதத்திலில்லை. பாரதம் முதலிய பிற்கால வடபனுவல்களிலேயே அது வழங்குகின்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.

சிவயோகி சிவக்குமார் விளக்கம்: - Thirukkural Meaning in Tamil


சிறப்பான பூசனைகள் செல்லாது வரியார்க்கும் வானோர்க்கும் வானம் வழங்கவில்லை என்றால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா.

Thirukkural in English - English Couplet:


If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

ThiruKural Transliteration:


siRappodu poosanai sellaadhu vaanam
vaRakkumael Vaanoarkkum iiNdu

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore