திருக்குறள் - 498     அதிகாரம்: 
| Adhikaram: itanaridhal

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

குறள் 498 - திருவள்ளுவர் - ThiruValluvar

"sirupadaiyaan sellidam saerin urupadaiyaan" Thirukkural 498 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும். இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும். ('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும் என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறு படையான் செல் இடம் சேரின் - சிறுபடையான் தனக்குப் பாதுகாப்பான புகலிடம் சென்று சேரின் ; உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் - அவனை வெல்லக் கருதிச் சென்ற பெரும்படையரசன் அவனை வெல்லும் வழியின்மையால் தன் ஊக்கங் கெட்டு வினையொழிந்து திரும்புவான் . விடுதல் விட்டு நீங்குதல் , வினைக்கு இடமின்மையால் விடும் என்றார் . இது , உடும்பு முயல் முதலியவற்றைத் துரத்திச் சென்ற நாய் , அவை வளைக்குள் நுழைந்தபின் திரும்பி வருவது போன்றது . சிறுபடையான் புகுந்த இடத்திற்குச் செல்லும் வழி பெரும்படை செல்ல முடியாவாறு மிக ஒடுங்கியிருக்குமாதலாலும் , ஒவ்வொருவராகவோ சிற்சிலராகவோ செல்லத்துணியின் மேலிருந்தோ ஒரு கோடியில் நின்றோ சிறுபடை பெரும்படை முழுவதையும் வெட்டி வீழ்த்திவிடுமாதலாலும் , மலைவழியும் மரமடர்ந்த காட்டுவழியுமாயின் பெரும்படை வழிதெரியாது மயங்கி இடர்ப்பட நேருமாதலாலும் , 'ஊக்க மழிந்து விடும்' என்றார் . 1841 - ஆம் ஆண்டு நிகழ்ந்த முதலாம் ஆபுகானியப் போரில் , இந்தியப்படை முழுவதும் கைபர்க்கணவாயிற் சுட்டுக் கொல்லப்பட்டது இங்கு நினைக்கத்தக்கது . 'உறு' உரிச்சொல் .

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சிறிய படை என்றாலும் தனக்கு உரிய இடத்தில் இருந்து செயல்பட வலிமையான படையும் தனது ஆர்வத்தை இழக்கும்.

Thirukkural in English - English Couplet:


If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.

ThiruKural Transliteration:


siRupadaiyaan sellidam saerin urupadaiyaan
ookkam azhindhu vidum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore