திருக்குறள் - 209     அதிகாரம்: 
| Adhikaram: theevinaiyachcham

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

குறள் 209 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thannaiththaan kaadhala naayin enaith" Thirukkural 209 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் தன்னைக் காதலன் ஆயின்-ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; தீவினைப் பால் எனைத்து ஒன்றும் துன்னற்க-பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியொடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க. பிறர்க்குச் செய்த தீவினை தப்பாது தனக்குத் துன்பம் விளைத்தலால், 'தன்னைத்தான் காதலனாயின்' என்றார். காதல் என்றது அறிவோடு கூடிய காதலை. தீவினைப் பகுதியொடு பொருந்தாமையாவது தீவினை செய்யாதிருத்தலே. ஒன்று என்னும் எண்ணுப் பெயர் இங்குச் சிறிதளவுப் பொருளினது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


ஒருவன் தன்னைத்தானே விரும்புவானானால் சிறிதளவும் பிறனுக்குத் தீச் செயல் ஒன்றேயாயினும் செய்யாதிருப்பானாக.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் மீது தனக்கே நேசம் உள்ளவனாக இருந்தால் எப்பொழுதும் அழிக்கவேண்டும் கெடுதல் சார்ந்தவைகளை.

Thirukkural in English - English Couplet:


Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!.

ThirukKural English Meaning - Couplet -Translation:


If a man love himself, let him not commit any sin however small.

ThiruKural Transliteration:


thannaiththaan kaadhala naayin enaiththondrum
thunnaRka theevinaip paal.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore