திருக்குறள் - 251     அதிகாரம்: 
| Adhikaram: pulaanmaruththal

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

குறள் 251 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thannoon perukkarkuth thaanpiridhu oonunpaan" Thirukkural 251 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன் அருளுடையவனாவது மற்றியா தானோ?. ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, ஊன் உண்டலை ஒழிதல். கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது.) தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண் பான்-தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன்; எங்ஙனம் அருள் ஆளும்-எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன். உடம்பைப் பருக்க வைத்தற்குக் கொலையில்லாத வுணவு நிரம்ப விருத்தலானும், உடம்பை எங்ஙனம் பேணினும் அது அழிந்து போவதாதலாலும், ஊனுணவு பெறுதற்கு ஓர் உயிரியை எள்ளளவும் இரக்கமின்றிக் கொல்ல வேண்டியிருத்தலானும், குற்றமற்றவுயிரிகளை மேன்மேலுங் கொல்வது கொடுமையினுங் கொடுமையாதலானும், 'எங்ஙனம் ஆளும் அருள்' என்றார். ஆளவே ஆளான் என்பது விடை. உயிருள்ளது உயிரி (பிராணி)

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தன்னுடைய உடம்பினை வளர்ப்பதற்காக, தான் மற்றொரு உயிரின் உடம்பினைத் தின்பவன் எவ்வாறு அருளினை நடத்துவான்?.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தனது உடல் பெருகத்திற்க்காக மட்டும் அடுத்த உடலை உண்ணுபவன் எப்படி அருளால் ஆளப்படுவான்.

Thirukkural in English - English Couplet:


How can the wont of 'kindly grace' to him be known,
Who other creatures' flesh consumes to feed his own?.

ThirukKural English Meaning - Couplet -Translation:


How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.

ThiruKural Transliteration:


thannoon perukkaRkuth thaanpiRidhu oonuNpaan
enganam aaLum aruL.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore