திருக்குறள் - 202     அதிகாரம்: 
| Adhikaram: theevinaiyachcham

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

குறள் 202 - திருவள்ளுவர் - ThiruValluvar

"theeyavai theeya payaththalaal theeyavai" Thirukkural 202 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம். தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தீச் செயல்கள் தீமையினையே கொடுப்பதால் தீச் செயல்கள் தீயினைவிடக் கொடுமையென்று அஞ்சப் படும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


கெடுதல் கெடுதலை உண்டாக்குவதால் கெடுதல் நெருப்பை விட அஞ்சப்படும்.(குறிப்பு;- நெருப்பு மேலும் நெருப்பை உண்டாக்க வல்லது)

Thirukkural in English - English Couplet:


Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Because evil produces evil, therefore should evil be feared more than fire.

ThiruKural Transliteration:


theeyavai theeya payaththalaal theeyavai
theeyinum anjap padum.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore