திருக்குறள் - 557     அதிகாரம்: 
| Adhikaram: kotungonmai

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

குறள் 557 - திருவள்ளுவர் - ThiruValluvar

"thuliyinmai gnaalaththirku etratrae vaendhan" Thirukkural 557 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது. மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


துளியின்மை ஞாலத்திற்கு எற்று - மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ ; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அத்தகையதே அரசனின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்குந் துன்பமும் ஆகும். "வானோக்கி வாழு முலகெல்லாம்" என்னுங் குறள் (542) இங்கு எதிர்மறை முகத்தால் ஒரு புது வலிமை பெறக் கூறப்பட்டது . இலை யென்பது சிறப்பாக வாழையிலையைக் குறித்தல் போல், துளி யென்பது இங்கு மழைத்துளியைக் குறித்து மழையென்னும் பொருளில் ஆகுபெயராக நின்றது . உயிர் என்றது இங்குக் குடிகளை. 'ஞாலம்' ஆகுபெயர் . என்னது - எற்று . (என் + து ) . அன்னது - அற்று (அன் + து ) . ஏகாரம் தேற்றம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


மழை இல்லாமையானது உலகில் வாழும் உயிர்களுக்கு எவ்வகைத் துன்பத்தினை உண்டாக்குமோ, அவ்வகைத் துன்பம் அருளில்லாத வேந்தன் நாட்டில் வாழும் மக்களுக்கு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


மழைத்துளி இல்லாது போனால் இவ்வுலகிற்கு ஏற்றது இல்லை. அதைப் போலவே ஆட்சியர் கொடுக்கும் தன்மையற்று இருப்பது வாழும் உயிர்க்கு ஏற்றது இல்லை.

Thirukkural in English - English Couplet:


As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.

ThirukKural English Meaning - Couplet -Translation:


As is the world without rain, so live a people whose king is without kindness.

ThiruKural Transliteration:


thuLiyinmai GnaalaththiRku etratrae vaendhan
aLiyinmai vaazhum uyirkku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore