திருக்குறள் - 939     அதிகாரம்: 
| Adhikaram: soodhu

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

குறள் 939 - திருவள்ளுவர் - ThiruValluvar

"udaiselvam oon oli kalviendru aindhum" Thirukkural 939 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


உடையும், செல்வமும், உணவும், புகழும், கல்வியுமென்று சொல்லப்பட்ட ஐந்தும் சூதினைக் கொள்ளின் சாராவாம். செல்வம்- பொன்னும், மனையும், பூமியும், அடிமையும் முதலாயின.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆயம் கொளின் - அரசன் சூதினைத் தனக்கு வினோதத் தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம் ஊண் உடை என்று அடையாவாம் - அவனை ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்று இவ்வைந்தும் சாராவாம். (ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது. செல்வம் - அறுவகை உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால் துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும் பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான் இருமையும் கெடுதல் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


ஆயம் கொளின்- ஒருவன் சூதாட்டைப் பொழுதுபோக்காகவோ பொருளீட்டும் வழியாகவோ மேற்கொள்ளின்; ஒளி கல்விச் செல்வம் ஊண் உடை என்று ஐந்தும் அடையாவாம்- அவனைப் பெயர் விளங்கலும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் ஆகிய ஐந்தும் சேராவாம். அகவுடைமையும் புறவுடைமையும் எல்லாப் பொருள்களும் இல்லாதவனாவான் என்பதாம். சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குப் புதுப்பொருள் வராமையாலும் பழம்பொருள் போய் விடுவதாலும், 'ஐந்தும் அடையாவாம்' என்றார். அரசனாயின், அவன் செல்வம், படை, குடி, நாடு, கூழ், அரண், கருவூலம்,உரிமைச்சுற்றம் முதலியனவாம், 'ஒளி', 'கல்வி' முதலியன செய்யுள் நடைநோக்கி முறைமாறி நின்றன, ஆயம் சூதாட்டு. 'ஐந்தும்' முற்றும்மை. சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குக் கல்வி கற்க நேரமின்மையாலும், ஏற்கனவே கற்றதும் "நூறுநாள் ஓதி ஆறு நாள் விடத்தீரும்", என்ற பழமொழிப்படி மறந்து போமாதலாலும், மறவாத ஒழுக்க நெறிமுறைகளும் கைக்கொள்ளப்படாவாதலாலும், அடையாப் பொருள்களுள் கல்வியும் ஒன்றாகக் கொள்ளப்பட்டது.ஊண்போல் உடையும் இல்லாமற் போவானென்றது பொதுப்பட வறுமை குறித்ததேயன்றி, நளன் நாடிழந்து காடடைந்தபின் ஓதிமத்தை (அன்னத்தை) வளைத்து ஆடையிழந்ததையும், பாண்டவர் தம்மைப் பணையமாக வைத்தாடித் தோற்றுத் தம் மேலாடையிழந்ததையும், குறித்ததன்று.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டவர்களை விட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கி விடும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உடை, செல்வம், உணவு, சுயஅறிவு, கற்ற கல்வி, என ஐந்தும் சேர்ந்து விலகிவிடும் சூதாட்டத்தை ஏற்றுக்கொண்டால்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும்.

Thirukkural in English - English Couplet:


Clothes, wealth, food, praise, and learning, all depart
From him on gambler's gain who sets his heart.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.

ThiruKural Transliteration:


udaiselvam ooN-oLi kalviendru aindhum
ataiyaavaam aayanG koLin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore