திருக்குறள் - 261     அதிகாரம்: 
| Adhikaram: thavam

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

குறள் 261 - திருவள்ளுவர் - ThiruValluvar

"utranhoai noandral uyirkkurukan seyyaamai" Thirukkural 261 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


[அஃதாவது, மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல்,புலான் மறுத்து உயிர்கண்மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது ஆகலின், இது புலால் மறுத்தலின்பின் வைக்கப்பட்டது.) தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - இயற்கையாகவுஞ் செயற்கையாகவும் தமக்கு நேருந் துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுதலும் , பிறவுயிர்கட்குத் துன்பஞ் செய்யாமையுமாகிய அவ்வளவே; தவத்திற்கு உரு - தவத்தின் வடிவாம். இத்தவ விலக்கணம் தொகுத்துக் கூறல் என்னும் உத்தி பற்றியது. ஏகாரம் தேற்றம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


தவத்திற்கு வடிவம் என்னவென்றால், தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவதும், தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பதுவுமேயாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


தான் அடைந்த குற்றங்களை விளக்கிக் கொள்வது உயிருக்கு துன்பம் செய்யாது இருப்பது இதுவே ஏற்படுத்திக் கொண்ட தவத்திற்கு அடையாளம்.

Thirukkural in English - English Couplet:


To bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.

ThiruKural Transliteration:


utranhoai noandral uyirkkuRukaN seyyaamai
atrae thavaththiR guru,

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore