திருக்குறள் - 330     அதிகாரம்: 
| Adhikaram: kollaamai

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

குறள் 330 - திருவள்ளுவர் - ThiruValluvar

"uyirutampin neekkiyaa renpa seyirudambin" Thirukkural 330 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


முற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - அருவருப்பான நோயுடம்புடன் வறுமை கூர்ந்து இழிதொழில் செய்து உயிர்வாழ்பவரை; உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - முற் பிறப்பில் உண்ணும் பொருட்டு உயிர்களை அவை நின்ற உடம்பினின்று நீக்கியவர் என்று சொல்வர் வினைப்பயன் அறிந்தோர். செல்லாமை-வாழ்க்கை நடவா வறுமை . இழிதொழில் இரந்து பிழைத்தல். "அக்கேபோ லங்கை யொழிய விரலழுகித் துக்கத் தொழுநோ யெழுபவே - யக்கால் அலவனைக் காதலித்துக் கான்முறித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால்." (நாலடி. 123). என்பது செயிருடம்பிற்குக் கரணியம் (காரணம்) கூறிற்று.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உயிரை உடம்பிலிருந்து நிக்கியவர் (கொலைசெய்தவர்கள்) எனப்படுவர்கள் செயல்படும் உடம்பில் செல்லாத தீய வாழ்க்கை வாழ்வார்கள்.

Thirukkural in English - English Couplet:


Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.

ThirukKural English Meaning - Couplet -Translation:


(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).

ThiruKural Transliteration:


uyirutampin neekkiyaa renpa seyirudambin
sellaaththee vaazhkkai yavar.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore