திருக்குறள் - 1179     அதிகாரம்: 
| Adhikaram: kanvidhuppazhidhal

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

குறள் 1179 - திருவள்ளுவர் - ThiruValluvar

"vaaraakkaal thunjaa varindhunjaa aayidai" Thirukkural 1179 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


(நீயும் ஆற்றி நின் கண்களுந் தூங்குதல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா-காதலர் வராதிருக்கும்போது அவர் வரவுநோக்கி வழிமேல் விழிவைத்துத் தூங்கா ; வரின் துஞ்சா-அவர் வந்த பின்போ மீண்டும் பிரிதலஞ்சித் தூங்கா; ஆயிடைக் கண் ஆரஞர் உற்றன-இங்ஙனம் அவ்விருநிலைமையிலும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தை யடைகின்றன. என் கண்கள் ஒருபோதும் தூங்கும் நிலைமையில்லை யென்பதாம்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


வரவில்லை என்றாலும் தூங்குவது இல்லை வந்தாலும் தூங்குவது இல்லை அன்பால் இணைந்தவர் கண்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


காதலர் வராத போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன!

Thirukkural in English - English Couplet:


When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.

ThirukKural English Meaning - Couplet -Translation:


When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.

ThiruKural Transliteration:


vaaraakkaal thunjaa varindhunjaa aayidai
aaragnar utrana kan.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore