திருக்குறள் - 534     அதிகாரம்: 
| Adhikaram: pochchaavaamai

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

குறள் 534 - திருவள்ளுவர் - ThiruValluvar

"achcha mudaiyaarkku aranillai aangillai" Thirukkural 534 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை: அதுபோலப் பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை. இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. (நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அச்சம் உடையார்க்கு அரண் இல்லை - உள்ளத்தில் அச்சமுடையவர்க்கு மதில் காடு மலை முதலிய அரண்களிருப்பினும் அவற்றாற் பயனில்லை ; ஆங்கு - அதுபோல ; பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை - மறவியுடையார்க்குப் படை செல்வம் முதலிய நலங்களிருந்தும் அவற்றாற் பயனில்லை. அச்ச முடையார்க்கு அழிவு நேர்வது போல் மறவியுடையார்க்கும் நேர்வது உறுதி என்பது கருத்து. நன்மைக்கேது வானது நன்கு . நல் - நன் - நன்கு.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


அச்சம் உள்ளவருக்கு பாதுகாப்பு அரண் இல்லை அதுபோலவே இல்லை மறதி உள்ளவருக்கு நன்மை. * உலகமே பாதுக்காப்பு அரணாக நினைப்பவர் அச்சம் தவிர்க்கிறார், நினைவாற்றால் உள்ளவர் நன்மை அடைகிறார்.*

Thirukkural in English - English Couplet:


'To cowards is no fort's defence'; e'en so
The self-oblivious men no blessing know.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).

ThiruKural Transliteration:


achcha mudaiyaarkku araNillai aangillai
pochchaap pudaiyaarkku nanku.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore