திருக்குறள் - 92     அதிகாரம்: 
| Adhikaram: iniyavaikooral

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

குறள் 92 - திருவள்ளுவர் - ThiruValluvar

"agan amarndhu eedhalin nandrae mukan" Thirukkural 92 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின்-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ந்து இனிய சொல்லும் உடையனாகப் பெறின்; அகன் அமர்ந்து ஈதலின் நன்று-அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம். வெறுநோக்கினும் வெறுஞ் சொல்லினும் ஒரு பொருளைக் கொடுத்தலே உண்மையிற் சிறந்ததாயினும், மக்கள் பொதுவாக வெளிக்கோலத்திற்கே வயப்படுவதால், அகமலர்ச்சி வெளிப்படாத கொடையினும் முகமலர்ச்சியோடு கூடிய இன்சொல்லே நல்ல தென்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: - Thirukkural Meaning in Tamil


முகமலர்ச்சியுடன் இனிய சொல்லினனாக இருந்து விட்டால், அத்தன்மை நெஞ்சம் உவந்து ஈகையினைச் செய்வதை விடவும் நல்லதாகும்.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


உள்முகமாக இருந்து செய்யும் செயல்களில் நல்லது முக மலர்ச்சியுடன் இனிய வார்த்தைகள் சொல்லுவது.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்.

Thirukkural in English - English Couplet:


A pleasant word with beaming smile's preferred,
Even to gifts with liberal heart conferred.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

ThiruKural Transliteration:


agan-amarndhu eedhalin nandrae mukanamarndhu
insolan aakap peRin.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore