திருக்குறள் - 1027     அதிகாரம்: 
| Adhikaram: kutiseyalvakai

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.

குறள் 1027 - திருவள்ளுவர் - ThiruValluvar

"amarakaththu van kannar poalath thamarakaththum" Thirukkural 1027 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர் மேலதானாற் போல; தமரகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பலராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


அமர் அகத்து வன்கண்ணர் போல-போர்களத்திற்குச் சென்றார் பலராயினும், போரைத் தாங்கும் பொறுப்பு ஒரு சில கடுமறவர் மேலேயே இருத்தல்போல; தமர் அகத்தும் பொறை ஆற்றுவார் மேற்றே-ஒரு குடியிற் பிறந்தார் பலராயினும், அதை முன்னேற்றும் பொறுப்பு அதைச் செய்யவல்ல ஒரு சிலர் மேலேயே உள்ளதாம். விளக்கம்பற்றி உவமத்திற்கும் பொருட்கும் வேண்டிய சொற்கள் வருவிக்கப்பட்டன. உம்மை இறந்தது தழுவிய எச்சம். ஏகாரம் பிரிநிலை. இக்குறளால் குடிசெய்வாரின் பொறுப்புக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


போர்களத்தின் வன்மையாக செயல்படும் வீரரைப் போல் தன் இருப்பிடம் சிறக்க செயல்படுபவருக்கே துன்பம் அழிக்கும் பொறுப்பு முழுமை பெறும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார்; அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக் காப்பவர்.

Thirukkural in English - English Couplet:


The fearless hero bears the brunt amid the warrior throng;
Amid his kindred so the burthen rests upon the strong.

ThirukKural English Meaning - Couplet -Translation:


Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.

ThiruKural Transliteration:


amarakaththu van-kaNNar poalath thamarakaththum
aatruvaar maetrae poRai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore