திருக்குறள் - 1014     அதிகாரம்: 
| Adhikaram: naanutaimai

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

குறள் 1014 - திருவள்ளுவர் - ThiruValluvar

"aniandroa naanudaimai saandroarkku aqdhindrael" Thirukkural 1014 - Meaning in English & Tamil Vilakkam

மு.வரதராசனார் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

மணக்குடவர் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ? அஃதில்லையாயின் பெரிய நடை நோயன்றோ? இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.

பரிமேலழகர் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றோர்க்கு நாண் உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம். (அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும் கூறினார். ஓகார இடைச்சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா.தேவநேயப் பாவாணர் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றோர்க்கு நாண் உடைமை அணி அன்றோ-அறிவு நிறைந்தோர்க்கு நாணுடைமை ஓர் அணிகலமே; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வணிகல மில்லையாயின் அவரது பெருமித நடை அவருக்கொரு நோயேயாம். அணிசெய்வதை 'அணி' யென்றும் , இயல்பிற்கு மாறானதைப் 'பிணி' யென்றும் கூறினார்; எதிர்மறையடுத்த ஓகார வினாக்கள் ஓசை வேறுபட்டால் உடன்பாட்டுப் பொருள் தந்து அதைத் தேற்றஞ் செய்தன. இக்குறளின் பிற்பகுதிக்கு, "அவ்வாபரண மில்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்...பொறுத்தற் கருமையிற் 'பிணி'யென்றுங் கூறினார்". என்பது பரிமேலழகருரை.இம் முக்குறளாலும் நாணுடைமையின் சிறப்புக் கூறப்பட்டது.

சாலமன் பாப்பையா உரை: - Thirukkural Meaning in Tamil


நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: - Thirukkural Meaning in Tamil


நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.

சிவயோகி சிவக்குமார் உரை: - Thirukkural Meaning in Tamil


சான்றோர்கள் விருப்பமுடன் அணிவது நாணுடைமை அப்படி இல்லை என்றால் அவர்களின் கம்பீர நடைக்கு நேயாகிவிடும்.

புலியூர்க் கேசிகன் - Thirukkural Meaning in Tamil


நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும்.

Thirukkural in English - English Couplet:


And is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see.

ThirukKural English Meaning - Couplet -Translation:


The Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).

ThiruKural Transliteration:


aNiandroa naaNudaimai saandroarkku aqdhindrael
piNiandroa peedu nadai.

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore